தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முதலமைச்சர் விஜய் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 66 ஆயிரத்து 650 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்த தேர்தல் முடிவை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களான தினேஷ், லட்சுமி, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் முதலமைச்சர் விஜய் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்கவில்லை என்றும், சொத்து விவரங்கள், வருமான வரி தொடர்பான தகவல்கள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்களை முறையாக வெளிப்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 2011 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.3 கோடியே 44 லட்சத்து 46 ஆயிரத்து 642 மதிப்பிலான வருமான வரி நிலுவை தொடர்பான தகவலை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் திட்டமிட்டு மறைத்ததாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல், பெரம்பூர் தொகுதியில் தேர்தல் அலுவலகம் அமைப்பதற்காக ரூ.10 லட்சம் மட்டுமே செலவழித்ததாக தேர்தல் செலவுக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அதற்காக குறைந்தது ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டதாகவும், அந்த செலவு விவரங்கள் மறைக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனுடன், தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகள் மூலம் பெற்றோர்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்கத் தூண்டியதாகவும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான செயல் என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
அப்போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் உரிய முறையில் சென்றடையவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்திய தேர்தல் ஆணையம், பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் வழக்கில் இடம்பெற்றுள்ள பிற எதிர்மனுதாரர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்துள்ள மற்றொரு தேர்தல் வழக்கும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜயின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
