நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், தற்போதைக்கு அரசியலுக்கு வரும் திட்டமும் இல்லை என்றும் அவரது தரப்பிலும், அகில இந்திய தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், “புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறீர்களா?” என்று தனுஷிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காமல், புன்னகையுடன் கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், கடந்த ஜூலை 5, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றக் கூட்டத்தில், ரசிகர்களின் சமூக நலப்பணிகளுக்கான புதிய அடையாளக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில், நடிகர் தனுஷ் கைகூப்பி வணங்கும் படத்துடன், “எண்ணம் போல் வாழ்க்கை… எண்ணம் போல்தான் வாழ்க்கை” என்ற வாசகம் இடம்பெறும் வகையில் அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து, தனுஷின் ரசிகர்கள் இந்தக் கொடியை அறிமுகப்படுத்தியதால், தனுஷும் அரசியலுக்கு வரத் தயாராகி வருகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த நிலையில், தனுஷ் நற்பணி மன்ற நிர்வாகிகள் அந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்தக் கொடி புதிதாக உருவாக்கப்பட்டதல்ல. கடந்த பல ஆண்டுகளாக நற்பணி மன்றத்தின் செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரத்ததான முகாம்கள், சமூக நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நற்பணிகளில் மட்டுமே இந்தக் கொடி பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நடிகர் தனுஷுக்கு தற்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அவர் தொடர்ந்து தனது திரைப்படப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.
