https://republictn.com/

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் பயன்படுத்திய “தெரு நாய்” என்ற உவமை சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அதற்கு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், புதிய அரசு மற்றும் புதிய அரசியல் சூழல் குறித்து பேசினார்.

அப்போது, “நாம் ஒரு புதிய வீட்டிற்குச் செல்லும்போது அங்குள்ள சூழலைப் பழகிக் கொள்ள சில காலம் தேவைப்படும். ஆரம்பத்தில் அங்குள்ள சூழ்நிலைகள், மக்கள் மற்றும் சில எதிர்வினைகள் இயல்பாக இருக்கலாம். அதற்கு நாம் அவகாசம் கொடுத்து பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும், அந்த உதாரணத்தை விளக்கும்போது, “புதிய சூழலில் ஆரம்பத்தில் சில எதிர்வினைகள் இருக்கலாம். அதனை புரிந்துகொண்டு நாம் பொறுமையாக அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இந்த உரையின் ஒரு பகுதியை மட்டும் பகிர்ந்து, “அரசை விமர்சிக்கும் மக்களை அவர் தெரு நாய்களுடன் ஒப்பிட்டார்” என சமூக வலைத்தளங்களில் தவறான புரிதலுடன் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள ராகவா லாரன்ஸ், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எப்போதும் என் ரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வருகிறேன். அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் எண்ணம் எனக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய வீட்டிற்கு செல்லும்போது அங்குள்ள சூழலை, மனிதர்களை மற்றும் சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும் என்பதை மட்டுமே எடுத்துக்காட்டாக கூறினேன் என்றும், மக்களை குறிப்பிட்டு எந்தவித அவமதிப்பும் செய்யவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அத்துடன், அரசியல் நோக்கத்துடன் தனது கருத்து திரித்து பரப்பப்படுவதாகவும், முழு காணொளியையும் பார்த்து உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago