https://republictn.com/

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே புதுமணத் தம்பதியருக்கிடையே தேனிலவின் போது ஏற்பட்ட அசாதாரண பிரச்சனை, தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்ராஜ் பகுதியைச் சேர்ந்த சாதனா என்ற இளம்பெண்ணுக்கும், டெல்லியைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞருக்கும் மேட்ரிமோனியல் தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்காக இருவரும் நைனிடால் பகுதிக்குத் தேனிலவு செல்ல திட்டமிட்டனர். புதுமண வாழ்க்கையின் இனிய தருணங்களை கணவருடன் தனியாகக் கழிக்கலாம் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் சாதனா இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பயணம் தொடங்கும் நேரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. கணவர் விவேக், தனது பெற்றோர், சகோதரர் மற்றும் சகோதரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களையும் தேனிலவு பயணத்தில் இணைத்திருந்தார். இதனால், புதுமணத் தம்பதிகளுக்கான தனிப்பட்ட பயணம் குடும்பச் சுற்றுலாவாக மாறியது.

இதனால் அதிருப்தியடைந்த சாதனா, பயணத்தின் போதே கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நைனிடால் பயணம் கசப்பான அனுபவமாக மாறிய நிலையில், உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் முயற்சியாக பின்னர் துபாய்க்கு இரண்டாவது தேனிலவு பயணத்தை விவேக் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இந்த முறைவும் அதே நிலை தொடர்ந்துள்ளது. துபாய் பயணத்திற்கும் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் விவேக் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொறுமையிழந்த சாதனா, கணவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததோடு, குடும்ப நல மையம் மற்றும் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

புகாரில், “தேனிலவு என்பது கணவன்-மனைவி இருவரும் தனிப்பட்ட முறையில் நேரத்தை செலவிட்டு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கான முக்கியமான வாய்ப்பு. ஆனால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்து வந்து அந்த வாய்ப்பை கணவர் முற்றிலும் கெடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், கணவர் விவேக் தனது தரப்பில், “குடும்ப உறுப்பினர்களும் அந்த இடங்களைப் பார்த்து மகிழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் அவர்களை அழைத்துச் சென்றேன். இதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குடும்ப நல ஆலோசனை மையத்தில் நான்கு முறைக்கும் மேல் சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இருவரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து, சாதனா தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். தேனிலவு தொடர்பான கருத்து வேறுபாடு குடும்ப வாழ்க்கையையே பாதித்து, விவாகரத்து வரை சென்றிருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago