ஜனதா கட்சியிலிருந்து அண்ணாமலை விலகி, ‘வீதி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கியதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ‘வீதி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்து, அண்ணாமலைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை திறமையான, துணிச்சலான தலைவர் என்றும், அனைத்து துறைகளிலும் பேசும் திறன் கொண்டவர் என்றும் கரு நாகராஜன் பாராட்டியுள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருந்தால் மட்டுமே அந்தக் கட்சி வளர்ச்சி பெற முடியும் என்றும், தற்போது அவர் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதால் அதில் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், அரசியல் மாற்றத்தை உருவாக்குவதும் அண்ணாமலையால் மட்டுமே சாத்தியம் என்றும், அதே பணியை தொடர தாம் அவருடன் இணைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “வீதி லீடர்ஸ்” இயக்கத்தில் இணைந்து அண்ணாமலைக்கு ஒரு அணிலைப் போல துணையாக இருப்பேன்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த விலகல் காரணமாக, தமிழக பாஜகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அண்ணாமலையின் புதிய இயக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோவையில் வெளியாகும் நிலையில், அடுத்த கட்டமாக கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் அந்த இயக்கத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
