காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியதோடு, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி. பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, உண்மையில் தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தின் மக்களவை இடங்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது. இந்த நடவடிக்கை, தெற்கு மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு திட்டமிட்ட உத்தி. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை மாநிலத்தின் அடையாளத்தைக் குறிவைக்கின்றன என்றும் அவர் கூறினார்.
தனது உணர்ச்சிப்பூர்வமான உரையில், ”நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும், மாநில மக்களுடன் என்னை இணைத்துக் கொள்கிறேன். தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். எனது தந்தை ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்காக அனைத்தையும் கொடுத்தார். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் அடையாளத்தையும் மொழியையும் பேணுவதற்கான உரிமை உண்டு. இந்த அரசாங்கம் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்க விரும்புகிறது. எந்தவொரு மாநிலத்தின் அடையாளத்தையும் அடக்கும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றையும் புரிந்து கொள்ளவில்லை. பாஜக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள விரும்புகிறது. டெல்லியிலிருந்து உத்தரவுகளைப் பெற்று, அதன் விருப்பப்படி செயல்படக்கூடிய ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது.
நேற்று அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தினர். அதை அவர்கள் மகளிர் மசோதா என்று அழைத்தனர், ஆனால் அது ஏற்கனவே 2023-ல் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அந்த மசோதாவின் பின்னணியில் இருந்த மறைமுக நோக்கம் தொகுதி மறுவரையறைதான். இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும், தெற்கு மற்றும் சிறிய மாநிலங்களை பலவீனப்படுத்துவதுமே அதன் நோக்கமாக இருந்தது. நேற்று நாங்கள் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.”
பிரதமர் ‘ஒரே தேசம், ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மக்கள்’ என்று பேசும்போது, அவர் இந்திய அரசியலமைப்பைத் தாக்குகிறார். தமிழகம் தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்க வேண்டும். நாங்கள் மக்களுடன் துணை நிற்போம், அவர்களின் மொழி, கலாச்சாரம், உரிமைகளைப் பாதுகாப்போம்” என்றும் அவர் கூறினார்.
