ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே, காதலியை திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற இளைஞரின் முகத்தில், பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமது தமீன் என்பவரது மகன் லோகேஷ் கண்ணன். ஓச்சேரியை அடுத்த ஆயர்ப்பாடி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா என்ற இளம்பெண்ணும் லோகேஷ் கண்ணனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு பெண்ணின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே லோகேஷ் கண்ணன் மீது காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் லோகேஷ் கண்ணனை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் லோகேஷ் கண்ணன் தனது காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சம்பவத்தன்று தனது காதலியை திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்பதற்காக அவரது வீட்டிற்கு லோகேஷ் கண்ணன் சென்றுள்ளார்.
அப்போது, லோகேஷ் கண்ணன் தனது மகளிடம் தொடர்ந்து காதல் தொடர்பாக தொந்தரவு செய்து வருவதாகக் கூறி, பெண்ணின் தாய் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் வீட்டில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து வந்து லோகேஷ் கண்ணனின் முகத்தில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் லோகேஷ் கண்ணனின் முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், லோகேஷ் கண்ணனின் காதலியாக கருதப்படும் நட்சத்திராவும் அவருடன் மருத்துவமனையில் இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டு சென்ற இளைஞர் மீது, பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படும் சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
