தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பணபலமும் ஒருபுறம் இருக்க, கொள்கை உறுதியோடும் மக்கள் செல்வாக்கோடும் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், திமுகவின் கோட்டையைத் தகர்த்தெறிந்துள்ளது.
ஸ்டாலினின் கணக்கும் விஜய்யின் சவாலும்
கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர் விஜய், தனது பிரதானப் போட்டி திமுகவுடன் தான் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ விஜய்யைப் பொருட்படுத்தாதது போலக் காட்டிக்கொண்டு, தங்களின் போட்டி டெல்லியுடன்தான் என்று பிரசாரம் செய்தார். விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தால் அவர் பெரிய ஆளுமையாக வளர்ந்துவிடுவார் என்ற எண்ணத்தில் திமுக தலைமை மௌனம் காத்தது. இருப்பினும், விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குத் திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திமுகவினரை உள்ளுக்குள் மிரள வைத்தது என்பதே உண்மை.

பணம் புகுந்து விளையாடிய தேர்தல்
விஜய்யின் மக்கள் செல்வாக்கை எதிர்கொள்ள முடியாமல் திணறிய திமுக, இந்தத் தேர்தலில் பணத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியது. தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் எனத் தொடங்கி, விஐபி தொகுதிகளில் 5 ஆயிரம் ரூபாய் வரை வாரி இறைக்கப்பட்டது. எப்படியாவது பணத்தைக் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று திமுகவினர் போட்ட கணக்கு இன்று சுக்குநூறாகிப் போயுள்ளது.

விசில் சத்தத்தில் நிலைகுலைந்த அறிவாலயம்
பணபலம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஓட்டுக்காக ஒரு பைசா கூடச் செலவு செய்யாமல், நேர்மையான முறையில் களம் கண்ட விஜய்யின் கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கோடிக்கணக்கில் செலவு செய்தும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் இருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உற்சாகமான விசில் சத்தம், இன்று அண்ணா அறிவாலயத்தின் அதிகாரக் குரலை மழுங்கச் செய்துள்ளது. பணத்தைக் கொடுத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற ஆளுங்கட்சியின் மனப்பாங்கிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், விஜய்யின் விசில் சத்தம் திமுகவினரைச் செவிடு ஆக்கிவிட்டது என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் கசப்பான உண்மையாகும்
