தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், ஒரு மாபெரும் அரசியல் சுனாமியை ஏற்படுத்தி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் விஜய்யின் தவெக மக்களின் பேராதரவுடன் அசுர பலத்துடன் முன்னிலை வகிக்கிறது. ஆனால், பத்தாண்டு கால அரசியலுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்ட காங்கிரஸ் கட்சியோ, திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இன்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, அட்ரஸ் இல்லாமல் போயுள்ளது.
கைநழுவிப் போன பொற்கால வாய்ப்பு
தேர்தலுக்கு முன்பே தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், முக்கிய நிர்வாகிகள் மத்தியில் ஒரு தெளிவான சிந்தனை இருந்தது. திமுகவுடனான “ஒட்டுண்ணி” அரசியலைத் தவிர்த்து, வளர்ந்து வரும் சக்தியான தவெக-வுடன் கைகோர்க்க வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே பேசினர். இதற்காக ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவீன் சக்ரவர்த்தி நேரடியாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ராகுல் மீது மதிப்பு வைத்திருந்த விஜய்யும், காங்கிரஸை ஆட்சி அதிகாரத்தில் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்ளத் தயாராகவே இருந்தார்.
சிதம்பரம் – செல்வப்பெருந்தகையின் மாஸ்டர் பிளான்
ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்துகொண்டு திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ போலச் செயல்பட்ட செல்வப்பெருந்தகைக்கு இது பிடிக்கவில்லை. அவர் தனது அரசியல் லாபத்திற்காக மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைச் சரணடைந்தார். ஸ்டாலின் குடும்பத்தினரும் சிதம்பரத்தைச் சந்தித்து அழுத்தம் கொடுத்தனர்.
ப.சிதம்பரத்திற்குத் தமிழக காங்கிரஸின் வளர்ச்சியில் துளியும் அக்கறை இல்லை. அவரது கணக்கெல்லாம், அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள தனது ராஜ்யசபா எம்பி பதவியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்பதுதான். திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே அவர்களது எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் எம்பி ஆக முடியும் என்ற சுயநலத் திட்டத்திற்காக, ஒட்டுமொத்த தமிழக காங்கிரஸையும் திமுகவிடம் அடகு வைத்தார்.
ராகுலின் கோபமும்… சோனியாவின் மௌனமும்
சிதம்பரம் கொடுத்த நெருக்கடியால், சோனியா காந்தி ராகுலிடம் பேசி, திமுக கூட்டணியையே உறுதி செய்தார். இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். அதன் வெளிப்பாடுதான், தமிழகத்திற்குப் பிரசாரம் செய்ய வந்த ராகுல், கடைசி வரை ஸ்டாலினைச் சந்திக்காமல் புறக்கணித்தது. ராகுலின் உள்ளுணர்வு சொன்ன உண்மையை, சிதம்பரத்தின் டெல்லி லாபி மறைத்துவிட்டது.
கதறும் தொண்டர்கள்… கொதிக்கும் ராகுல்!
இன்று முடிவுகள் வந்த பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். “தவெக-வுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று நாம் அமைச்சர்களாக அமர்ந்திருப்போம். தமிழகத்தில் கட்சியை வேரூன்றச் செய்திருப்போம். சிலரின் பதவி ஆசையால் கட்சியின் எதிர்காலமே பாழாகிப் போனதே” என்று அவர்கள் புலம்புகின்றனர்.
டெல்லித் தகவல்களின்படி, ராகுல் காந்தி தற்போது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் அழிவதற்குப் பாதையமைத்துக் கொடுத்த சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை போன்ற “சுயநல பெருச்சாலிகள்” மீது ராகுலின் கோபப் பார்வை திரும்பியுள்ளது. இனி வரும் நாட்களில் டெல்லி மேலிடத்தில் மிகப்பெரிய களையெடுப்பு நடக்கும் என்பது மட்டும் உறுதி.
மொத்தத்தில், ஒரு தனிமனிதனின் எம்பி பதவி ஆசைக்காக, தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டதுதான் இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லும் உண்மை.
